Sunday, March 16, 2014

நந்திகேஸ்வரர் அஷ்டகம்

nandi-gana-big2

 

ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்

 

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர பாஹிமாம்

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர ரக்ஷமாம்

 

வேத பாதா ப்ரம்ம ரூபா சிவத்யானா பாஹிமாம்

துங்க சைலா தேவ தேவா சிவப்பிரியா ரக்ஷமாம்

 

விஷ்ணு ரூபா ப்ருத்வி ரூபா நீதி ஈஸ்வர பாஹிமாம்

வேதா சாரா மந்திர சாரா சாக்ஷாத் காரா ரக்ஷமாம்

 

ஸோம சூர்யா அக்னி லோசன நந்திகேஸ்வர பாஹிமாம்

பாபஹரணா பர்த்திவாசா சகல லோக ரக்ஷமாம்

 

சதானந்த சித்ஸ்வரூபா சின்மயேசா பாஹிமாம்

கைலாஸா கனகரூபா பண்டிதாயா ரக்ஷமாம்

 

பிரதோஷ காலா பரமேஸ்வரா பக்தபாலா பாஹிமாம்

நாடி போதக காலகண்டா கருணாகரா ரக்ஷமாம்

 

சகல தோஷா சகல பீடா தஹண நாமா பாஹிமாம்

சர்வ சத்ரு சர்வ ரோக நிவாரணா ரக்ஷமாம்

 

சித்த புருஷா சித்த நாயகா சேவிதாதி பாஹிமாம்

நடன ரூபா நாட்டியப் பிரியா ம்ருதங்க வாத்யா ரக்ஷமாம்

 

நாம் மேலே காண்பது நந்திகேஸ்வரர் அஷ்டகம் ஆகும்.  இது இறைவன் சிவபெருமானின் நேரடி சீடரும், வாகனமும் ஆகிய நந்திகேஸ்வரரை போற்றி புகழும் பாடல் ஆகும்.  ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் மேற்கண்ட நந்திகேஸ்வரர் அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் நந்தியின் அருளோடு சிவபெருமானின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, March 13, 2014

நவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்

shri-lalitha-devi1

சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும்.  சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரனங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே.  பராசக்தியின் வடிவங்கள் பலப்பல.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள்.  அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.

நவசக்தியரின் பெயர்கள் பின்வருமாறு:-

  1. மனோன்மணி
  2. சர்வபூதமணி
  3. பலப்பிரதமணி
  4. கலவிகரணி
  5. பலவிகரணி
  6. காளி
  7. ரவுத்திரி
  8. சேட்டை
  9. வாமை

நவசக்தியரின் இயல்புகளும், தொழில்களும்:-

வ.எண்

நவசக்தியின் பெயர்

இயல்பு மற்றும் தொழில்

1. மனோன்மணி

பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.

2. சர்வபூதமணி

உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.

3. பலப்பிரதமணி

சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.

4. கலவிகரணி

வானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை கொண்டவள்.

5. பலவிகரணி

சந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள்.

6. காளி

காற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.

7. ரவுத்திரி

நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள்.

8. சேட்டை

நீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.

9. வாமை

மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் நவசக்தியே போற்றி…! போற்றி…!! போற்றி…!!!

Tuesday, March 11, 2014

மந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை

om

நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம்.  மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர்.  ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன.  பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன.  சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை.  இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான்.  மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன.  அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது.  ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மந்திர செபத்தில் வெற்றி பெற எமக்கு தெரிந்த விதிமுறைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-

  1. மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
  2. மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.
  3. மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.
  4. மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
  5. மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
  6. மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின்  நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
  7. மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
  8. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.
  9. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
  10. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.
  11. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.
  12. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
  13. மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.
  14. பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
  15. உணவில் தயிர் சேர்க்கக்கூடாது.  தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.
  16. உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும்.  இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.
  17. செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.
  18. ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.
  19. மற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.
  20. மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.
  21. பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
  22. சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.
  23. 12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.
  24. பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.
  25. மந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.
  26. அதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.
  27. மந்திர செபம் செய்வதை யாரிடமும் கூறக்கூடாது.
  28. முதல் நாளிலேயே அதிகமாக செபம் செய்ய கூடாது.
  29. படிப்படியாக செபம் செய்யும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும்.
  30. ஒரே இடத்தில் தான் செபத்தினை செய்ய வேண்டும்.  அடிக்கடி இடத்தினை மாற்றுதல் கூடாது.
  31. வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.
  32. உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.
  33. கால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

Sunday, March 9, 2014

பிரம்மஹத்தி தோஷமும் – அதனை போக்கும் முறையும்

mahalingam

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

நம்மில் பலர் இந்த பிரம்மஹத்தி தோஷம் என்ற வார்த்தை கேட்டிருக்கலாம்.  பிராமணரை (பிரம்மத்தினை உணர்ந்தவரை) கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும்.  கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று.

பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது.  பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார்.  பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.

பிரம்மத்தினை உணர்ந்த ஒருவரை கொல்வது மிகப் பெரிய பாவம் ஆகும்.  எந்த ஒரு உயிரைக் கொன்றாலும் அது பெரிய பாவமே.  ஏனெனில் உயிர்கள் அனைத்தும் பிரம்மனின் படைப்பே.  அவற்றினை அழிக்க நமக்கு உரிமையில்லை.  அந்தந்த உயிர்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றின் உயிர்களை கவரும் வேலையை எமதர்மராசாவுக்கு இறைவன் அளித்துள்ளார். 

கொலைக்கு புனிதமான காரணங்கள் இருந்தாலும் அது தோஷத்தினையே தரும்.  ராவணனை ராமபிரான் கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.  அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது.  அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம்.

பிரம்மஹத்தி தோஷத்தினை எவ்வாறு அறியலாம்?

ஒருவருடைய பாவ புண்ணிய கணக்கினை அறிந்து கொள்ள உதவும் காலக்கண்ணாடி அவரவர் ஜாதகம் ஆகும்.  முறையாக – துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் ஒருவரின் பாவம் மற்றும் புண்ணிய கணக்கினை எளிதாக கண்டறியலாம். மேலும் யோகங்களையும், தோஷங்களையும் கண்டறியலாம்.  எது எப்படி இருந்தாலும் தோஷங்கள் நீங்காமல் யோகங்கள் பலன் தராது என்பதே எமது அனுபவம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.  உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை.

பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன?

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது.  ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும்.  இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும்.  தீராத கடனும் பகையும் உண்டாகும்.  குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.  தீராத வறுமை உண்டாகும். 

இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது.  இதே போன்ற பிரச்சனைகள் மற்ற தோஷங்களினாலும் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  பொதுவாக எந்த வகையான தோஷம் என்பதை தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான பரிகாரத்தினை முறையாக செய்திடல் வேண்டும்.

பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகாரங்கள்:

பொதுவாக தோஷங்களை போக்கும் கடவுள் சிவ பெருமான் ஆவார்.  அவரை முறைப்படி வணங்கிடில் எந்த ஒரு தோஷமும் விலகி ஓடும்.  சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார்.  நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும்.  ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும்.

இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன.  இந்த தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும்.  அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும்.

அதன் பின்னர் மாலையில் அருகில் உள்ள சிவத்தலம் சென்று எல்லா சந்திதிகளிலும் ஐந்து எண்ணெய் (நல்லெண்ணெய் + விளக்கெண்ணெய் + இலுப்பெண்ணெய் + வேப்பெண்ணெய் + நெய் ஆகியன சம அளவில் கலந்தது) கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  பின்பு அம்பிகை மற்றும் இறைவன் சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். 

அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.  பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும்.  அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.  இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும்.  இதன் மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.  இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில் கிட்டும்.

சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை.

சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது.

சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும்.  சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு.  அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு மிகவும் சிறந்தது.

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலங்கள்:

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு.

காசி
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
இராமேஸ்வரம்
மதுரை
திருவாஞ்சியம்
பிரம்மதேசம்
மேல்மலையனூர்

ஆகியன முக்கியமானவை ஆகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Thursday, March 6, 2014

பித்ரு தோஷம் - ஒரு விளக்கம்

ammavasai-21

பித்ரு தோஷம் என்றால் என்ன?

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.  நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை.  மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும்.  அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும்.  இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.

ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும்.  ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை.  ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன்.  ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.

முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.  இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே.  ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும். நாம் நமது  முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும்.  நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.

அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும்.  அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும்.  நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும்.  நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.

 

பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

  1. பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
  2. ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
  3. ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
  4. ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
  5. ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
  6. ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, March 4, 2014

பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்

govu

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும்.  தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர்.  தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.  நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம்.  அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.  நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும்.  அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும்.  இதுவே பிதுர்கடன் எனப்படும்.  இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.  நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும்.  இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும்.  இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.

ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம்.  பயம் கொள்ள தேவையில்லை.  நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும்.  இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது.  நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள்.  நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும்.  அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர்.  அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர்.  அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.  அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.  இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.  கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.  எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.  மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது.  இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.  பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை.  எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை.  இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான்.  எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும்.  இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது.  மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும்.  பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும்.  அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, March 2, 2014

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

Nataraja-Sivagamasundari-nalvar-Screen

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது.  உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும்.  இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.  அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.  எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் /  தேவதைகள்:-

  • அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இது மிகவும் நன்மை பயக்கும்.  குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும்.  குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.  குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
  • அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இதுவும் நன்மை பயக்கும்.  நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.  குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே. 
  • எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம்.  முழு முதற் கடவுள் இவரே.  இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.  காரியசித்தி உண்டாக்குபவர் இவரே.  விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.  நல்வழி காட்டுபவரும் இவரே.
  • குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம்.  இது குழந்தை வரம் தரும்.  குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  நல்ல குழந்தைகள் பிறக்கும்.  பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
  • ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும்,  அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
  • மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.  திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.  இல்லறம் நல்லறமாக நடக்கும்.
  • அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  நாம்  அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.  தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
  • சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.   சிவசக்தி கலப்பே உலகம்.  சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை.  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.  எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
  • ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
  • குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும்.  குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
  • தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.  பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
  • ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர்.  அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
  • லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் திருமகளின் அருள் கிட்டும்.  நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
  • சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இது சிவசக்தி அருளைத் தரும்.  16 பேறுகளும் கிட்டும்.  நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.  கர்மவினைகள் தொலையும்.  மாயை விலகும்.  முக்தி கிட்டும்.
  • ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.  இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும்.  கல்வி ஞானம் கிட்டும்.  ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
  • கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே.  இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.  நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
  • லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.  குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை.  இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
  • அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.  இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.  மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
  • துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.  இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.  கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.  வியாபாரம் பெருகும்.
  • அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது.  இதன் மூலம் வறுமை அகலும்.  பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.  வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
  • சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் குருவருள் வந்து சேரும்.  தோஷங்கள் விலகும்.  கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.  வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.

எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.  இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும்.  நன்றி…!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்