Saturday, August 31, 2013

திருவாதிரை திருநாள் பரிசு - அண்ணாமலையாரின் திருப்பெயர்கள்





தென்னாடுடைய சிவனே போற்றி...!  
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!  
எங்கள் அண்ணாமலையானே போற்றி போற்றி...!!!

ஓம் சிவ சிவ ஓம்

வேலூரின் நாயகன் - அருள்மிகு ஜலகண்டீஸ்வரர்

 
 

இன்று (31-8-2013) திருவாதிரை திருநாள்.  இன்று எல்லாம் வல்ல எம் இறைவன் - குருபரன் - சிவபெருமானின் பிறந்த விண்மீன் - திருவாதிரை.  இத்தகைய சிறப்புடைய இந்நன்னாளில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வரரின் பெருமைகளை உங்களுக்கு வழங்குவதில் ஆன்மீகச்சுடர் பெருமை கொள்கிறது.

வேலை மாநகர் என்று சிறப்பித்து கூறப்படும் வேலூரின் புராண பெயர் வேலங்காடு.  வேல மரங்கள் அதிகம் காணப்பட்ட காடு.  இதில் தான் அத்திரி முதலான ஏழு முனிவர்கள் வேலூருக்கு கிழக்கே உள்ள பகவதி மலையில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.  இதில் அத்திரி மகரிஷியைத் தவிர மற்றவர் வேறிடம் சென்றுவிட்டனர்.  அத்திர் முனிவர் மட்டும் சில காலம் வழிபாடு நடத்தி வந்தார்.  பின்னர் அவரும் சென்றுவிட்டார்.  நாளடைவில் அவர் வழிபட்ட சிவலிங்கம் கவனிப்பாரற்று கிடந்தது.  அதை சுற்றி புற்று வளர்ந்து மூடிவிட்டது.

பொம்மி ரெட்டி நாயக்கர் மற்றும் திம்மி ரெட்டி நாயக்கர் என்பவர்கள் வேலூர் மக்களை கொள்ளைக்கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றியதால் அரசர் அவர்கள் இருவருக்கும் சிறு படையையும், பரிசாக நிலங்களையும் வழங்கினார்.  அவர்கள் அதில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப முனைந்தனர்.  சிவபெருமான் ஐந்து தலை நாகமாக வந்து ஐந்து காம்புகள் கொண்ட பசுவின் மடியில் பால் குடிக்க, அதைக்கண்ட பொம்மி ரெட்டி அங்கேயே உறங்கினார்.  கனவில் சிவபெருமான் தான் தான் அந்த நாகம் என்பதை எடுத்துரைத்தார்.

இறைவனிடம் பொம்மி ரெட்டி ஆலயம் எழுப்பும் எண்ணத்தை எடுத்துரைக்க, இறைவன் வேலூரை அடுத்த பள்ளிகொண்டராயன் மலையில் ஒரு புதையலை காண்பித்தார்.  மக்களின் துணையோடு அந்த புதையல் மூலம் கோவிலை கட்ட ஆரம்பிக்கும் போது அங்கிருந்த வேலமரக்காட்டினை அழிக்க நேரிட்டது.  அப்போது ஒரு புதரிலிருந்து முயல்கள் வெளிப்பட்டன.  அவற்றை ஒரு நாய் துரத்தியது.  அவை சிறுவட்டப்பாதையில் சுற்றின.  சற்று நேரத்தில் முயல்களில் ஒன்று நாயை திரும்பி நின்று பெரிய வட்டப்பாதையில் துரத்த ஆரம்பித்தது.  பின்பு அவை ஒரு புற்றினுள் சென்று மறைந்தன.

அப்போது வானில் தெய்வ வாக்கு “சிறு வட்டப்பாதையை எல்லையாக வைத்து கோவில் எழுப்புக” என்று கட்டளையிட்டது.  அப்புற்றினுள் அத்திரி முனிவர் வழிபட்ட லிங்கம் இருந்தது.  அதை சுற்று கோவில் அமைக்கப்பட்டது.  ஆலயம் எழுப்பிய நாள் சரியில்லாததால் வழிபாடு தடைபடும் என்று இறைவன் கனவில் உரைத்தார்.  அதற்கு பரிகாரமாக முயல் நாயை துரத்திய பெரிய வட்டப்பாதையில் ஒரு கோட்டையையும், அதைச் சுற்றி அகழியையும் அமைக்க சிற்பி கூறினார்.

அவ்வாறே கோவிலும், கோட்டையும், அதனைச் சுற்றி அகழியும் அமைக்கப்பட்டு வழிபாடு நிகழ்ந்து வந்தது.  கி.பி 1612 ம் ஆண்டில் முகலாயர் படையெடுப்பில் ஜலகண்டீஸ்வரர் கோவில் லிங்கத்தின் அடியில் உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கேள்விபட்டான்  முகலாய அரசன் மகமதுகானுக்குப் பின் வந்த அரசன் அப்துல்லா.  அவன் லிங்கத்தை அகற்றி அகழியில் எறிந்தான்.  அதனால் அவனுடைய ஆட்சி வெகு நாள் நீடிக்கவில்லை.  அந்த அரசர்களின் பெயர்களில் இன்றும் மகமதுபுரம் மற்றும் அப்துல்லாபுரம் ஆகிய ஊர்கள் அமைந்திருக்கின்றன.

அதன் பின்னர் மராட்டிய மன்னர் துக்கோஜிராவ் கோட்டையை முற்றுகையிட்டு வென்றார்.  அகழியில் இருந்த சிவலிங்கத்தை மீண்டும் நிறுவினார்.  இரண்டாண்டுகள் கழித்து சுல்தான்கள் மீண்டும் கோட்டையை பிடித்தனர்.  21 ஆண்டுகளாக ஆலயத்தில் வழிபாடு நடக்கவில்லை.  பின்னர் மராட்டிய மன்னர் சீனிவாசராவ் வேலூர் கோட்டையை வென்றார்.  அவருக்குப்பின் 30 ஆண்டுகள் வழிபாடு இனிதே நடந்து வந்தது.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மீண்டும் முகலாயர் படையெடுப்பில் லிங்கத்தினை சேதப்படுத்தி விடுவர் என்று பயந்த இந்து வீரர்கள் லிங்கத்தினை வேலூரை அடுத்த சத்துவாச்சாரி என்னும் இடத்தில் ஜலகண்டீஸ்வரர் கோவில் லிங்கம் என்ற பெயரில் இருந்து வந்தது.  அதன் பின்பு 1928 ல் புருஷோத்தமன் என்கிற பேருந்து நடத்துநர் மறுபடியும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்தார்.  அந்த முயற்சி 16-03-1981 அன்று நிறைவுற்றது.

இக்கோவிலின் மறுவழிபாட்டிற்கு அரும்பாடுபட்டவர்களின் விபரம் தனிப்பதிவாக வெளிவரும்.


இக்கோவில் மூலவரின் பெயர் ஜ்வரகண்டீஸ்வரர் ஆவார்.  நாளடைவில் அப்பெயர் ஜலகண்டீஸ்வரர் என்று வழங்கலாயிற்று.  லிங்க பீடத்தின் அடியில் தண்ணீர் இருப்பதாக ஐதீகம்.  எனவே தான் ஜலகண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.  அம்மையின் பெயர் அகிலாண்டீஸ்வரி.  இத்தலத்தில் கார்த்திகை மாதம் தீபத்திருநாளன்று மும்மூர்த்திகளும் வீதியுலா செல்வர்.  மேலும் முப்பெரும்தேவியரும் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

இத்தலம் காசிக்கு நிகரானது.  இங்குள்ள பைரவரின் எதிரே கங்கா - பாலாறு ஈஸ்வரரும், கிணறு வடிவில் கங்கை நதியும் அமைந்துள்ளது சிறப்பு.  காசியைப் போலவே கால பைரவர், சிவ லிங்கம் (கங்கா - பாலாறு ஈஸ்வரர் - கிணறு வடிவில் தோன்றிய கங்கை நதியில் கிடைத்த லிங்கம்), கங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது.  இத்தலத்து கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

இத்தலத்து கால பைரவர் பெருமானைப் பற்றி தனிப்பதிவு விரைவில் வெளிவரும்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடக்கும்.  அம்பிகையின் எதிரே அணையா நவசக்தி தீபம் ஒளிவிடுகிறது.  இத்தலத்து இறைவன் தொழில் மேன்மையைத் தருவார்.  இனிய வாழ்க்கை துணையைத் தந்தருளுவார்.  அவரின் கருணையை சொல்ல ஒரு நாக்கு போதாது.  வழிபட்டு பலன் அடைந்தவர்களின் அனுபவமே இதற்கு சாட்சி.

இந்த ஆலயம் வேலூர் மாநகரின் மையப்பகுதியான பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கோட்டையினுள் அமைந்துள்ளது.  கோட்டையை சுற்றியுள்ள இடத்தில் வணிக தலங்கள் நிரம்பியுள்ளன என்பது இத்தலத்து இறைவனின் கருணைக்கு ஓர் சான்று.  இத்தலத்தை சுற்றியுள்ள வணிகர்கள் அனைவரும் இறைவனை வழிபட்டே தொழிலில் மேன்மை பெற்றுள்ளார்கள் என்பது வேலூர் மக்கள் அறிந்ததே.

தங்கபல்லி மற்றும் வெள்ளி பல்லிகள் மற்றும் சூரிய, சந்திரர்களை விழுங்கும் ராகு, கேது சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  பல்லி தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இச்சிற்பங்களை தொட்டு வணங்கி தோஷ நீக்கம் பெறுகின்றனர்.  இத்தலத்தில் வயதான தம்பதிகள் தங்கள் 60ம் மற்றும் 70ம் திருமண நிறைவு விழாக்கள் நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், அன்னைக்கு சாகம்பரி அலங்காரமும் மிக்க விசேடமானது.  இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள குளத்திற்கும்  வேலூருக்கு அருகிலுள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் சிம்ம குளத்திற்கும் இடையே சுரங்கப்பாதை உள்ளதாக செவிவழி செய்தியும் உண்டு.  பாலாற்றின் கரையில் அமைந்த சிவத்தலம் என்பது தனிச்சிறப்பு.  பாலாற்றங்கரையி்ன் தென்கரைத்தலம் ஆகும்.

தொடர்வண்டி வழி: காட்பாடி சந்திப்பில் இறங்கி நகர பேருந்து தடம் 1 அல்லது 2 ல் ஏறி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினால் இக்கோவிலை அடையலாம்.  பேருந்து வழி:  புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து தடம் 1 அல்லது 2 ஏறி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினால் இக்கோவிலை அடையலாம்.

வேலை மாநகர் வருக...!  கோட்டை நாயகன் அருள் பெருக...!

ஓம் ஹ்ரீம் ஜ்வரகண்டீஸ்வராய நமஹ

ஓம் ஹ்ரீம் ஜலகண்டீஸ்வராய நமஹ

ஓம் கோட்டை நாயகனே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி...!  
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!! 
ஓம் சிவ சிவ ஓம்

Friday, August 30, 2013

செல்லியம்மன் துணை



     வேலூர் மாநகரின் எல்லை தெய்வம் - செல்லியம்மன்

 தொண்டை மண்டலத்தின் சிறப்புமிகு ஊர் வேலூர் ஆகும்.  சான்றோர்கள் தோன்றிய ஊர் ஆகும்.  கோட்டை நாயகன் அருள்மிகு  ஜலகண்டீஸ்வரரும், அம்மை அகிலாண்டேஸ்வரியும் அருள்புரியும் தலம்.  கல்வி மாநகர் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

 வேல மரங்கள் அதிகமாக வளர்ந்திருந்த காடு பின்பு வேலூர் என்று அழைக்கப்பட்டது.  பழைய பெயர் வேலை மாநகர்.  ராய வேலூர் என்பது இதன் வரலாற்று பெயர்.  அத்திரி முனிவர் தவமியற்றிய தலம் வேலூர்.  ராய மன்னர்களின் தலைநகர் வேலூர்.

 ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக விளங்கிய நகரம் வேலூர் ஆகும்.  வீரம் விளைந்த மண் வேலூர் ஆகும்.  இங்கு தோன்றிய சிப்பாய் புரட்சி இந்திய திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 இத்தகைய சிறப்பு மிகு வேலூரின் எல்லைத் தெய்வம் செல்லியம்மன் ஆவாள்.  அன்னை செல்லியம்மன், ஷீரமாநதி என்று சிறப்பித்து கூறப்படும் பாலாற்றின் தென்கரையில் வீற்றிருந்து வேலூரின் எல்லை தெய்வமாக, காவல் தெய்வமாக வேலூரை காத்து வருகிறாள்.

 செல்லியம்மனின் ஆலயம் பாலாற்றின் தென்கரையில், புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகே அமைந்துள்ளது.  தனியார் பேருந்து உரிமையாளர்களால் உருவாக்கப்பட்ட இத்தலம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

 வெள்ளிக்கிழமை மற்றும் விசேட நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.  தொழில் சிறக்க வேண்டுவோர் தொடர்ந்து செல்லியம்மனை வழிபடின் தொழிலில் மேன்மை பெறுவர் என்பது திண்ணம்.  சிறு கோவிலாக இருந்த இத்தலம் தற்போது பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.


 வேலூர் வருபவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் செல்லியம்மன் கோவில் ஆகும்.  வெளியூர் அன்பர்கள் பேருந்தில் வந்தால் எல்லோரும் எளிதில் தரிசிக்கலாம்.  தொடர்வண்டி மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலைய நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்து மறுமுனைக்கு சென்றால் செல்லியம்மனை தரிசிக்கலாம்.

 வெளியூர்களிலிருந்து பேருந்தில் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கவும்.  பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தான் கடைசியாக சென்று நிற்கும்.  அருகில் உள்ள தொடர்வண்டி சந்திப்பு காட்பாடி.  காட்பாடி சந்திப்பிலிருந்து ஏற வேண்டிய பேருந்து எண்கள்: 1,2.  இறங்க வேண்டிய நிறுத்தம் புதிய பேருந்து நிலையம்.

 வேலூர் வரும் போது செல்லியம்மனை தரிசியுங்கள்.  அம்மையின் அருள் பெற்று வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்.

ஓம் செல்லியம்மையே போற்றி

Thursday, August 29, 2013

மகா முனீஸ்வரர் துணை

    

எம் காவல் தெய்வம் - மகா முனீஸ்வரர்



நம் பாரத தேசத்தில் உருவான கோவில்களில் அவற்றின் பாதுகாப்புக்காக ஒரு தெய்வம் அமர்த்தப்பட்டிருக்கும்.  நம் தமிழ் நாட்டு அம்மன் கோவில்களின் பாதுகாப்புக்காக அய்யனார், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர் போன்ற தெய்வங்கள் அமர்த்தப்பட்டுள்ளன.

முருகர் தன் தாயின் கோவில்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கிய காவல் தெய்வமே முனீஸ்வரர் ஆவார்.  இவர் பைரவரின் அம்சம்.  இவரின் வாகனம் நாய் ஆகும்.  இவரின் கோவில்களில் சிமெண்டினாலான பெரிய சுதை வடிவமும், அதற்கு கீழே கற்சிலையும் காணக்கிடக்கும்.

இவர் சக்தி வாய்ந்த லாட தெய்வம் ஆவார்.  குழந்தைகளை பேணி வளர்ப்பதில் இவருக்கு மிகுந்த ஆவல் உண்டு.  நம்மில் பலரின் குலதெய்வமாக இவர் தான் திகழ்கிறார்.  இவருக்கு முனி, சடையன், சடைசாமி என்று பல பெயர்கள் உண்டு.

திருடர்களிடமிருந்தும், பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளிலிருந்தும் நம்மையும், நாம் வாழும் ஊரையும் காப்பவர் இவரே.  இவரை முறைப்படி தொடர்ந்து வழிபடின் திருடர், பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் இவற்றின் பாதிப்பில்லாமல் நலமுடன் வாழலாம்.

இவரின் கண்களுக்கு நேராக சூலம், வேல், வீச்சரிவாள் ஆகிய மூன்று போர்கலன்கள் நிலத்தில் ஊன்றி வைக்கப்பட்டிருக்கும்.  சக்தியின் ஆயுதமாக சூலமும்முருகனின் ஆயுதமான வேலும்முனீஸ்வரரின் ஆயுதமான வீச்சரிவாளும் இவருக்கு முக்கியமானவை.

அதாவது சக்திக்கு காவலாக முருகனால் படைக்கப்பட்ட தெய்வம் முனீஸ்வரர் என்பதே இதன் விளக்கமாகும்.  இத்தகைய பெருமை வாய்ந்த தெய்வம் முனீஸ்வரர் ஆவார்.

இவருக்கு அதிரசம், பொரி கடலை, கருவாடு, முட்டை, இறைச்சி, சாராயம் இவற்றை படைப்பது உண்டு.  இவருக்கு ஆடு, பன்றி, எருமை ஆகிய மூன்று உயிர்களை பலியிடும் வழக்கமும் உண்டு.  சிலர் 108 ஆடுகளையும், 1008 ஆடுகளையும் பலியிட்டு தனது நேர்த்திகடனை செலுத்தியிருக்கிறார்கள் என்றால் இவரது சக்தியை நீங்களே உணரலாம்.

எது எப்படியிருப்பினும் இவருக்கு அதிரசமே மிகவும் பிடித்தமானது.  மேலும் எந்த முனீஸ்வரரும் தனக்கு இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று கேட்டதில்லை.  மக்கள் தன் திருப்திக்காக தான் மேற்கண்ட பொருட்களை படையலிடுவதும், பலியிடுவதும் செய்கிறார்கள் என்பதே உண்மை.

இப்பதிவில் நீங்கள் காணும் முனீஸ்வரரின் பெயர் மகா முனீஸ்வரர் ஆவார்.  முனிகளுக்கெல்லாம் மூத்தவர் இவரே.  இவரை பெரியண்ணன், பெரியாண்டவர், பெரியசாமி என்றும் அழைப்பதும் உண்டு.

இவரது ஆலயம் வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், ஊசூரை அடுத்த சிவநாதபுரம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இவரின் ஆலயங்களுக்கு கூரை கிடையாது.  தற்போது சிமெண்டினாலான சுதை வடிவம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல் 12 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  யார் வேண்டுமானாலும் அவருக்கு தங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம் என்பது முக்கிய செய்தியாகும்.

தம்மை அண்டியவர்களை காப்பாற்றி அருள்பாலிக்கும் மகா முனீஸ்வரின் பாதம் பணிந்து நாமும் எல்லா வளங்களையும், மன நிம்மதியையும் பெறுவோம்.

ஓம் ஹ்ரீம் மகா முனீஸ்வராய நமஹ

Wednesday, August 28, 2013

ரேணுகா தேவி துணை


எம் குலதெய்வம் - படைவீடு ரேணுகாம்பிகை

 


தட்சன் தான் செய்யும் யாகத்திற்கு தனது மருமகனான சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல் அவமதித்தான்.  சிவபெருமானின் சொல் கேளாமல் சென்ற சதி தேவி தன் தந்தையான தட்சனால் அவமதிக்கப்பட்டாள்.  அதனால் கோபமுற்ற தாட்சயனி யோக நிலையில் தன் உயிரை விட்டாள்.  இதனால் பித்து பிடித்த சிவபெருமான் தேவியின் உடலை தோளில் சுமந்தவாறே அலைந்து திரிந்தார்.

சிவன் தேவியின் உடலை தூக்கிக்கொண்டு தாண்டவமாட தேவியின் உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றாக சிதறி விழுந்தன.  அவ்வாறு சிதறி விழுந்த இடங்களிலெல்லாம் சக்தி பீடங்கள் தோன்றின.  ரத்த துளிகள் விழுந்த இடங்கள் அம்மனின் சிறு சிறு கோவில்களாக தோன்றின.

அவ்வாறு தோன்றிய சக்தி பீடமே மகாராஷ்டிர மாநிலம், நான்தேட் மாவட்டம், மாஹுர்கட் என்ற இடத்தில் உள்ள ரேணுகா தேவி ஆலயம் ஆகும்.  மந்திர நூல்களில் வர்ணிக்கப்படும் ரேணுகா தேவி, சக்தியின் அம்சம்.  அந்த சக்தியின் அம்சமான ரேணுகா தேவி, துர்க்கை ஆகியோர் தன் படைகளுடன் வந்து தங்கிய இடமே திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், சந்தவாசல் அருகே அமைந்திருக்கும் படைவீடு என்றழைக்கப்படும் அம்மன் கோவில் படைவீடு ஆகும்.  இதற்கு பெரிய கோட்டை என்று பெயர்.  கோட்டை அம்மன் என்பது இத்தலத்து தேவியின் வேறு பெயர் ஆகும்.

காலப்போக்கில் வரலாறு திரிக்கப்பட்டு ரேணுகா தேவி, ஜமதக்கினி முனிவரின் மனைவியாகவும், பரசுராமரின் அன்னையாகவும், கந்தர்வனின் அழகில் மயங்கியதாகவும், அதன் பின்னர் தலை வெட்டுண்டு மறுபடியும் உயிர்தெழுந்ததாகவும் கதைகள் உண்டு.

மந்திர நூல்களில் வர்ணிக்கப்படும் ரேணுகா தேவி முழு உடலை உடையவள்.  சக்தியின் அம்சம்.  கிரீடத்தில் சிவ லிங்கத்தை உடையவள்.  தலையை மட்டும் வழிபாடு செய்யும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. 

இப்பதிவில் காணும் ரேணுகா தேவியின் (அம்மன் கோவில் படைவீடு) படத்தில் தலைக்கு மட்டுமே வழிபாடு நடத்தப்படுகிறது.  உண்மையில் அது தலை அல்ல.  அது சுயம்பு லிங்கம்.  அந்த லிங்கத்தின் பெயர் சக்தி லிங்கம்.  

மேலும் அதனருகே மூன்று லிங்ககங்கள் உண்டு.  அவையே பிரம்ம லிங்கம், விஷ்ணு லிங்கம், சிவ லிங்கம்.  இம்மூன்றும் சுயம்பு லிங்கங்களே என்பதும் முக்கியமானது.

சக்தி லிங்கத்திற்கு வலப்புறம் இருப்பது சிவ லிங்கம்.  இடப்புறம் இருப்பவை பிரம்ம லிங்கம் மற்றும் விஷ்ணு லிங்கம்.  அதற்கும் இடப்புறம் இருப்பது சிரசு.

சிமெண்டினாலான சுதை வடிவமும், சிரசு வழிபாடும் பிற்காலத்தில் ஏற்பட்டவை.  சிரசு தனியாக இருப்பதை கவனிக்கவும்.  இக்கோவிலின் முன்பாக சிம்ம வாகனத்திற்கு பதிலாக நந்தி இருப்பதும் முக்கியமான ஒன்றாகும்.

ஆடி மாதம் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு.  ஆடி மாதம் தொடங்கி ஏழு வெள்ளிக்கிழமைகளும் கூட்டம் அலை மோதும்.  தற்போது இக்கோவில இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

முருகன், ராமன், ராவணன் மற்றும் ஆதி சங்கரர் வணங்கி வழிபட்ட பெருமையுடையது இத்தலம்.  இத்தலத்திற்கு பக்கத்தில் சிவன் கோவில் உள்ளது.  இக்கோவிலைச் சுற்றி நிறைய கோவில்கள் அமைந்துள்ளன.

மிக்க சக்தி வாய்ந்த தெய்வம் இத்தலத்து ரேணுகா தேவி.  பிள்ளைவரம் கேட்டவர்களுக்கெல்லாம் ஆண் மக்கட்பேறு தந்தருளும் அம்பிகை இத்தலத்து இறைவி.  இத்தகைய சிறப்புடைய ரேணுகா தேவியை வணங்கி சக்தியின் அருள் பெருவோம்.

வேலூர் - திருவண்ணாமலை சாலை தடத்தில் இறங்க வேண்டிய நிறுத்தம்: சந்தவாசல்.  அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.  நேரடி பேருந்துகள் குறைவு.

ஓம் கோட்டை நாயகியே போற்றி

ஓம் ஹ்ரீம் ரேணுகா தேவியை நமஹ

ஓம் சிவ சக்தி ஓம்

Tuesday, August 27, 2013

ஆனைமுகன் துணை

 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 

                                                                                   ---- திருமூலர்

     
ஐந்து கரங்களை உடையவரும், யானை முகத்தை கொண்டவரும், பிறை நிலவின் வடிவத்தை உடையதும் ஒளி பொருந்தியதுமான தந்தத்தை உடையவரும், எல்லாம் வல்ல சிவபெருமானின் புதல்வரும், ஞான ஒளியாகவும் விளங்கும் விநாயகப்பெருமானை உள்ளத்தில் வைத்து அவரின் பாதங்களை வணங்குகிறேன்.

விநாயகப்பெருமானின் உருவ விளக்கம்:-
  1. யானை முகம் ---- விலங்கு
  2. நான்கு கைகள் ---- தேவர்
  3. வயிறு           ---- ராட்சதர்
  4. கால்கள்        ---- மனிதர் 
விநாயகரின் நான்கு கைகளும் தேவர்களின் கைகளை உணர்த்துகின்றன.  தேவர்களுக்கு மட்டும் தான் நான்கு கரங்கள் உண்டு.  இது தேவர்களின் அம்சம் என்பதை உணர்த்துகிறது.

விநாயகரின் வயிறு பானை போன்ற தோற்றமுடையது.  ராட்சதர்களுக்கு மட்டுமே பெரிய வயிறு உண்டு.  இது செரிமான சக்தியை உணர்த்துகிறது.  விநாயகருக்கு மாலையாக கட்டப்படும் அருகம்புல் செரிமான குறைவை நீக்கும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

விநாயகரின் கால்கள் மனிதர்கட்கு உள்ளதை போன்ற கால்களின் அமைப்பினை உடையது.  இது மனித அம்சம் என்பதை உணர்த்துகிறது. 

விநாயகரின் உருவம் விலங்கு, தேவர், ராட்சதர் மற்றும் மனிதர் அனைவரும் அவர் முன்பு சமம் என்பதை உணர்த்துகிறது. 

முப்புரமெரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா” என திருப்புகழில் அருணகிரி நாதர் விநாயகரின் வீரத்தினை குறிப்பிடுகின்றார்.

விநாயகருக்கு ”கணபதி” (கணங்கள் - தேவ, மனித, அசுர, சித்த, யட்ச, சிவ கணங்கள் முதலிய அனைத்து கணங்கள், பதி - தலைவன்)  பட்டம் அவரது தந்தை சிவபெருமானால் வழங்கப்பட்டது.  அதாவது விநாயகரை முதலில் வழிபட்டே அனைத்து செயல்களும் செய்யப்பட வேண்டும்.  அதை மீறுபவர்களுக்கு இடையூறுகளை உண்டாக்க கணபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் அதை மறந்து சிவபெருமான் திரிபுரம் எரிக்க தேரில் செல்லும் போது தேரின் அச்சினை முறித்து விட்டார் விநாயகப்பெருமான்.  பின்னர் தான் கொடுத்த பட்டத்தை தானே மதியாமல் போனதை நினைத்து பின்பு விநாயகரை வழிபட்டு தம் மோகன புன்னகையால் திரிபுரம் எரித்தார் சிவ பெருமான்.  சிவனுக்கே விக்கினம் தந்த விக்கினேஸ்வரன் விநாயகர் ஆவார்.

4 வேதங்களும், 18 புராணங்களும், 2 இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரையே போற்றுகின்றன.  நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை மிக்கவர் விநாயகர். 

விக்கினங்களை தருவதும் அவற்றை அகற்றுவதும் இவரது வடிவமே...! 

அகார, உகார, மகார கலப்பே “ஓம்”. ”ஓம்” என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியிலும் அகாரம், உகாரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன.  நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும். 

சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே நாம் காலத்தைக் (சௌரமான கணிதம்) கணிக்கிறோம். சூரியனின் சொந்த வீடு சிம்மம். அங்கிருந்து சூரியன் 12 வீடுகளுக்கும் சென்று வருகிறார். எனவே சூரியன் சிம்மராசியிலிருக்கும் ஆவணியே வருடப் பிறப்பாகவும், முதல் மாதமான ஆவணியை, விநாயகரை வணங்கித் தொடங்கும் வழக்கமும் சுமார் 5,000 ஆண்டுகளுக்குமுன் வழக்கில் இருந்துவந்தது. விநாயக சதுர்த்தியும் ஆவணி மாதத்தில் தான் என்பது இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது.  காலமாற்றத்தால் சித்திரையே வருடப் பிறப்பாகிவிட்டது. இன்றைக்கும் கேரள மாநிலத்தில் கொல்லம் ஆண்டு ஆவணியில் தொடங்குவதைக் காணலாம்.  இதுவே சரியான கணக்கு. 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்கு தான் ராமன் தன் தந்தை தசரதருக்கும், தந்தை போன்ற சடாயு என்ற பறவை அரசனுக்கும் பிதுர்க்கடன் நிறைவேற்றினார்.  தசதரரே நேரில் வந்து பிண்டம் பெற்றுக்கொண்ட சிறப்பு வாய்ந்தது இத்தலம்.  இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். 

யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது. 

முதன்முதலில் உருவான விநாயகர் என்பதால் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

விநாயகப்பெருமானுக்கு உகந்த எண்ணிக்கை -- 21.  எனவே அவரை வழிபடும் போது அவருக்கு பிடித்த பொருட்கள் அனைத்தும் 21 என்ற எண்ணிக்கையாக இருந்தால் மிகவும் நல்லது.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாளில் (தேய்பிறை சதுர்த்தி) (பௌர்ணமியிலிருந்து நான்காம் நாள்) விரதமிருந்து ஆனைமுகனை வழிபடின் எல்லா சங்கடங்களும் விலகி நிம்மதியான வாழ்வு கிட்டும்.  ஆலயம் செல்ல இயலவில்லை எனில் வெற்றிலையில் மஞ்சளில் விநாயகரை பிடித்து, அறுகம்புல் சாற்றி வழிபடலாம்.  எந்த பொருளிலும் விநாயகரை பிடித்து வழிபடலாம்.  தவறில்லை.  பக்தியே முக்கியம்.
  

ஓம் கம் கணபதயே நமஹ